சினிமா

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார் - உறுதிப்படுத்திய பரேஷ் ராவல்

Veeramani

சூர்யா நடிப்பில் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்ற தகவலை அப்படத்தின் நடிகர் பரேஷ் ராவல் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் பரேஷ் ராவல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழி படங்களில் நடித்துள்ளவர், இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற சூரரைப்போற்று திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர். அவர் தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு டியர் ஃபாதர் என்ற படத்தின் மூலம் குஜராத்தி சினிமாவிலும் நடிக்கிறார்.

தான் அடுத்து நடிக்கவுள்ள படங்களைப்பற்றி பேசிய பரேஷ் ராவல், "சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்யப்படவுள்ளது. அந்த படத்தில் தமிழில் நடித்த அதே வேடத்தில் நான் நடிக்கிறேன். இந்த படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார்.

சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம் ஒரு உண்மை கதை. 'சிம்ப்ளி ஃப்ளை: எ டெக்கான் ஒடிஸி' என்ற அவரது சுயசரிதையின் தாக்கத்தில் இருந்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நான் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளேன்" என தெரிவித்தார்