துஷார் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடித்து கடந்த ஆண்டு வெளியான இந்திப் படம் `பரம்சுந்தரி'. கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை தேடி வரும் ஹீரோ, அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள எடுக்கும் முயற்சிகளே படம். இப்படத்தில் ஜான்வி கபூரை மலையாளியாக காட்டி இருந்த விதம், அவர் பேசிய மலையாளம், இந்தப் படம் கேரளாவை சித்தரித்த விதமும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது.
இப்படத்தில் இடம்பெற்ற `பர்தேஷியா' பாடலுக்கு மட்டும் நல்ல வரவேற்பு கிடைத்தது, சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இப்பாடலை பாராட்டி இருந்தார் ஏ ஆர் ரஹ்மான். விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரிய பின்னடைவையே சந்தித்தது இப்படம். தற்போது ஒரு பேட்டியில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், இப்படம் பற்றிய தன் கருத்தை தெரிவித்திருந்தார்.
ஜெயராம் - காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடித்துள்ள `ஆசைகள் ஆயிரம்' பட வெளியீட்டுக்காக இணைந்து பல பேட்டிகள் கொடுத்தனர். அப்படியான ஒரு பேட்டியில் சமீபத்தில் பார்த்ததில் மோசமான படம் எது என்ற கேள்வி கேட்கப்பட, அதற்கு பதிலளித்த காளிதாஸ் ஜெயராம் "`பரம்சுந்தரி' மிகவும் மோசம். நம் கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்குவது போல எடுக்கப்பட்டிருந்த படம். தயவு செய்து அதை பார்க்காதீர்கள், ரொம்ப மோசமாக இருந்தது" என்று கூறினார்.