பிக்பாஸ் புகழ் ஓவியாவின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா. பிக்பாஸில் அவர் யதார்த்தமாக பேசிய பேச்சுகள் கூட (நீங்க ஷட்டப் பண்ணுங்க), தற்போது இளசுகள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது எனக் கூறலாம். இந்நிலையில் ஓவியாவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில், புது படம் ஒன்றில் ஓவியா நாயகியாக நடிக்க உள்ளார். 'காட்டேரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஆதி சாய்குமார் புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகன் ஆவார். இப்படம் திகிலுடன் நகைச்சுவை கலந்த கலவையாக தயாராகிறது.