சினிமா

பிரியா வாரியரைவிட திறமையான நடிகை நூரின் ஷெரீஃப் - ஒரு அடார் லவ் இயக்குநர்

webteam

ஒரு அடார் லவ் திரைப்படத்தின் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரைவிட திறமையான நடிகை நூரின் ஷெரீஃப் என அப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு தெரிவித்துள்ளார்.

மலையாள மொழியில் இயக்குநர் ஓமர் லுலு இயக்கியத்தில் உருவாகிக்கொண்டிருந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின்  'மாணிக்ய மலரே' என்ற பாடல் வெளியிடப்பட்டதும் வைரலாக மாறியது. இப்பாடலில் நடித்த பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவியும் என பேசப்பட்டது.

இதையடுத்து அப்படம் கடந்த காதலர் தினம் அன்று திரைக்கு வந்தது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவு அப்படம் வெற்றியடையாமல் படுதோல்வி அடைந்தது. இதற்கு படக்குழுவினர் ஒருவரையொருவர் விமர்சித்தும் குற்றம் சாட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, “மாணிக்ய மலரே பாடல் வெளியாகும் வரை படத்தின் கதை வேறு வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பாடல் வைரலானதும் கதையை இன்னும் நல்ல தரத்தில் உருவாக்கலாம் என்றுதான் சொன்னேன். ஆனால் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் அளிக்ககோரி தயாரிப்பாளர்கள் என்னை வற்புறுத்தினர். அதற்கு முன்புவரை பிரியா வாரியர் முதன்மையான நடிகை இல்லை. பாடல் வைரலானதும் பிரியா வாரியருக்காக கதையை தயாரிப்பாளர் மாற்றியமைக்க கோரினார்.  பிரியா பிரகாஷ் வாரியரைவிட திறமையான நடிகை நூரின் ஷெரீஃப்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நூரின் ஷெரீஃப் ஒரு பேட்டியில், “இயக்குநர் ஓமர் லுலு இப்படத்தில் என்னை நடிகையாக தேர்வு செய்ததும் மிகவும் சந்தோசப்பட்டேன். ஆனால் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவ சிமிட்டல் வைரலானதும் கதை மாற்றப்பட்டு நான் துணை நடிகையாக மாறினேன். எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு நழுவியது மிகவும் வருத்தமாய் உணர்ந்தேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.