சினிமா

‘கர்ணன்’ ஓராண்டு நிறைவு : கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்

sharpana

‘கர்ணன்’ படத்தின் ஓராண்டு வெற்றிக்கொண்டாத்தை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது படக்குழு.

கொரோனா காலகட்டத்திலும் கூட்டம் கூட்டமாக மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’. சாதிய-அதிகார அடக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாள் ஏந்தி நின்றது ’கர்ணன்’. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் இசையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பெங்களூர் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படமாகவும் தேர்வாகி தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தது.

’புதுப்பேட்டை’, ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ வரிசையில் தனுஷின் நடிப்புக்காகவும் கதைக்களத்துக்காகவும் இப்போதும் கர்ணனைக் கொண்டாடுகிறார்கள். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார்கள். இந்த நிலையில், கர்ணன் வெளியாகி ஓராண்டு ஆவதையொட்டி தனுஷ், மாரி செல்வராஜ், தாணு உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 9 ஆம் தேதிதான் ‘கர்ணன்’ வெளியானது. தற்போது ‘வாத்தி’ படப்பிடிப்பில் இருக்கும் தனுஷை மாரி செல்வராஜும் தனுஷும் சந்தித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை மாரி செல்வராஜும் தனுஷும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.