"இந்தியாவில் ஒருவர் விரும்பிய மதத்தை பின்பற்றலாம் மதப்பிரச்சாரம் செய்யலாம் அதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்புச்சட்டம் கொடுத்துள்ளது" என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நான் கடவுள் இல்லை' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் அமீர் ”இந்தியாவில் யார் வேண்டுமானாலும் விரும்பிய மதத்தை பின்பற்றலாம், விரும்பிய மதத்திற்கு பிரச்சாரம் செய்யலாம். அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், ”பாரத பிரதமர் பேசுவதை கோவில்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். எனவே நல்ல விஷயங்கள் எந்த மதத்தில் இருந்தாலும், எந்த சமூகத்தில் இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும் அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் பயப்பட தேவையில்லை. எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் ஆகியோர் போல எஸ்.ஏ.சி என்ற மூன்று எழுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரை விஜய்யின் தந்தை என்று மட்டுமே தெரியும். ஆனால் அதிமுக ஆட்சி நடக்கும் பொழுது, கலைஞர் கருணாநிதி சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, அவர் வசனத்தில் கலைஞரின் ’நெஞ்சுக்கு நீதி’ என திரைப்படம் எடுத்தவர். பல புரட்சிகரமான படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். கதாநாயகிகள் நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இன்று உள்ள பல கதாநாயகிகள் 2 படம் நடித்த உடன் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதை அவர்கள் கைவிட வேண்டும்.
நயன்தாரா பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் அறம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தன. எனவே, நடிகைகள் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஓ.டி.டிவியில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைகிறது. அதற்கு, உதாரணம் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம். இந்த திரைப்படம் சமூகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது” என அமீர் தெரிவித்தார்.