சினிமா

நிவர் புயல் : ‘பார்த்து பத்திரம்’ மக்களை கவனமாக இருக்க சொல்லும் கோலிவுட் நடிகர்கள்

EllusamyKarthik

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியது. நள்ளிரவில் புயலின் மைய புள்ளி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் புயலில் இருந்து பத்திரமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் தமிழ் திரை நட்சத்திரங்கள்.

“நிவர் புயல் தாக்கத்திலிருந்து எல்லோரும் பத்திரமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சில இடங்களில் வெளியே செல்வதால் விபத்து ஏற்படுவதாகவும் கேள்வி பட்டேன். அதனால் முடிந்த வரை வீட்டில் இருங்கள். தேவை இருந்தால் மட்டும் வெளியில் வாருங்கள். முடிந்தால் வாயில்லா ஜீவன்களுக்கும் அடைக்கலம் கொடுங்கள்” என நடிகை கீர்த்தி சுரேஷ் ஃபேஸ்புக் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 

“முடிந்தவரை அவசர கால உதவி எங்களை பகிருங்கள்” என சொல்லி பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசர கால உதவி எண்களை பகிர்ந்துள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ். 

“நாம் எல்லோரும் ஒரே பூமியில் தான் வாழ்ந்து வருகிறோம். வாயில்லா ஜீவன்களால் தனது வலியை கூட சொல்லி அழ முடியாது. அதனால் சாலையோரம் அரவணைப்பு இன்றி தவித்து நிற்கும் பிராணிகளுக்கு உதவுங்கள். பத்திரமாக இருங்கள்” என நடிகர் வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்துள்ளார். 

“திடமாக இருங்கள். இந்த நிவர் புயல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவசர கால உதவி எங்களை செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். அனைத்தும் சரியாகும். பாதுகாப்பாக இருங்கள்” என நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

நடிகை மீனா, சினேகா, நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர் ரத்னகுமார் என பலரும் பத்திரமாக இருக்க சொல்லி தெரிவித்துள்ளனர்.