தெலுங்கின் முன்னணி நடிகையும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகளுமான நடிகை நிஹாரிகாவுக்கு உதய்ப்பூரில் நேற்றிரவு திருமணம் நடந்தது. இதில், தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நிஹாரிகா. விஜய் சேதுபதிக்கு அக்கா மகளாக நடித்திருப்பார். இவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை நிஹாரிகா கடந்த ஆகஸ்ட் மாதம் காதலர் சைதன்யா புகைப்படத்தை முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஆந்திராவில் குண்டூர் ஐ.ஜியின் மகனான சைதன்யா மற்றும் நிஹாரிகா காதலுக்கு இருவீட்டினரும் சம்மதிக்கவே உற்சாகமுடன் திருமணத்திற்கு தயாரானது, இந்த ஜோடி.
நேற்று முன்தினம் நடந்த நலங்கு நிகழ்ச்சியில்கூட தனது அம்மாவின் நிச்சயதார்த்த புடவையையே சென்டிமென்ட்டாக அணிந்து உறவினர்களின் பாராட்டுக்களைக் குவித்தார் நிஹாரிகா. அந்த நிகழ்ச்சியையொட்டி, நடிகர் சிரஞ்சீவி, நிஹாரிகாவுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகளை வழங்கினார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ஒபாராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்த இந்தத் திருமணத்திற்கு, அவரது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான்.
நிஹாரிகாவின் குடும்பமே சினிமா துறையை சேர்ந்தது. இவரது அப்பா நாகேந்திர பாபு நடிகர் மட்டுமல்ல, தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரும் கூட. இவரது பெரியப்பா சிரஞ்சீவி, பவன் கல்யாண் இருவரும் முன்னணி நடிகர்கள்.
அதோடு, இவரது சித்தப்பா மகன் ராம் சரண் மட்டுமின்றி, நிஹாரிகாவின் உடன்பிறந்த அண்ணன் வருண் தேஜ்ஜும் தெலுங்கின் முன்னணி நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இஇவர்களின் திருமணத்திற்கு நிஹாரிகா குடும்பத்தினரும், சிரஞ்சீவியின் குடும்பத்தினரும் தனி விமானத்தில் சென்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் தனி விமானத்தில் சென்று வாழ்த்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களோடு நிஹாரிகாவின் திருமணப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.