இணையதளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓடிடி தளங்களில் சினிமா, நிகழ்ச்சிகள், தொடர்கள் ஆகியவை வெளிடப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் அதிகளவு படங்களும் வெளிவந்தன. திரையரங்கிற்கு செல்லும் முன்னர் படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்படுகிற நிலையில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இம்முறை செயல்படுத்துவதில்லை.
இதனால் ஒடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களில் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனூடே அச்சு ஊடகங்களை கண்காணிக்க ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பும், செய்தி இணையதளங்கள் மற்றும் அதில் ஒளிப்பரப்பப்படும் விளம்பரங்களை கண்காணிக்க என்.பி.ஏ அமைப்பும், திரைப்படங்களை கண்காணிக்க சிபிஎப்சி அமைப்பும் இருக்கின்ற நிலையில், ஒட்டுமொத்த இணையதள உள்ளடக்கத்தை கண்காணிக்க தனி அமைப்பு இல்லை என மத்திய அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இணையதளங்களில் பதிவேற்றப்படும் சினிமா, செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டுவந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை என்பது கண்காணிப்பு, முறைப்படுத்துதல் சார்ந்ததாகவே இருக்கும் என்றும், இணைய ஊடக மற்றும் படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.