சினிமா

மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகினார் நெஞ்சுக்கு நீதி நடிகை - என்ன காரணம் தெரியுமா?

JananiGovindhan

நடப்பு ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகுவதாக உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்த ஷிவானி ராஜசேகர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகையான ஜீவிதா ராஜசேகரின் மகளான ஷிவானி ராஜசேகர் தமிழில் ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் நெஞ்சுக்கு நீதி படத்தின் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

ஏற்கெனவே ஃபெமினா மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றிருந்த ஷிவானி ராஜசேகர், தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியிலும் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகுவதாக ஷிவானி இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான MBBS படித்துவரும் ஷிவானி ராஜசேகர், மூன்றாமாண்டு தேர்வு காரணமாக மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஏனெனில், மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும், மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடக்கவிருக்கும் ஜூலை 3ம் தேதிதான் தனக்கு தேர்வு இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இம்முறை பங்கேற்க முடியாமல் போனது துரதிஷ்டவசமானதாக எண்ணுகிறேன். இருப்பினும், மிஸ் இந்தியா பட்டத்துக்கான இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கும் அழகு நிறைந்த திறமையான போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஷிவானி ராஜசேகருக்கு பதில் தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டிக்கு இம்முறை யாரும் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ALSO READ: