சினிமா

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா?

JustinDurai
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, தமிழில் இயக்கிய முதல் படம் ‘ராஜா ராணி’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் அட்லி.
இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அட்லியின் 'ராஜா ராணி', 'பிகில்' படங்களில் நயன்தாரா நடித்துள்ளதாலும், ஷாருக்கான் இந்தியில் முன்னணி கதாநாயகன் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.
நேற்று (ஜூன் 25) முதல் மும்பையில் 'பதான்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷாரூக்கான். அதனை முடித்துவிட்டு அட்லி படத்தின் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் அவர். நயன்தாரா கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.