சினிமா

’நான் செய்த மிகப்பெரிய தவறு அந்தப் படத்தில் நடித்ததுதான்’: நயன்தாரா

webteam

’கஜினி’ படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா. சிறந்த கதைகளைத் தேர்வு செய்து இப்போது நடித்து வரும் நயன்தாரா, கடந்த 15 வருடமாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். மீடியாவை சந்திக்காமல் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் ரேடியா ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், முருகதாஸ் இயக்கிய ’கஜினி’ படத்தில் நடித்தது தனது மிகப் பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார். 

அவர் அதில் கூறும்போது, தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் ’கஜினி’யில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது வேறு மாதிரி இருந்தது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக எடுத்துவிட்டார்கள். இதனால் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்தேன். அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாகக் கேட்க ஆரம்பித்து நடிக்கத் தொடங்கினேன்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அசின் நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அசினும் அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, அதே முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தர்பார்’ படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.