சினிமா

“நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தப்பட்டார்” பிரதமர் உடன் மாதவன் சந்திப்பு!

sharpana

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படமான ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாரயணன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் மாதவன் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். படத்தின் ட்ரைலர் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்ற நிலையில், நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் சேர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“பிரதமர் மோடியை சில வாரங்களுக்கு முன்பு நானும் நம்பி நாரயாணன் சாரும் சந்தித்துப் பேசினோம். ட்ரைலரைப் பார்த்து பாராட்டிய பிரதமர் நம்பி நாராயணன் சாருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வருத்தப்பட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், நம்பி நாராயணனை இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது.கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார். இதனை ஏற்ற கேரள அமைச்சரவை, அந்தப் பணத்தை தர ஒப்புதல் அளித்து பணத்தையும் வழங்கியது. இதனால், நம்பி நாரயணன் மீதான மதிப்பு மக்களிடத்தில் உயர்ந்தது.

இப்படத்தை இயக்குவதோடு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார் மாதவன். சிம்ரன் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது