சினிமா

நாக சைதன்யா-வெங்கட் பிரபுவின் ‘என்.சி.22’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சங்கீதா

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யாவின் ‘என்.சி.22’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழில் ‘மங்காத்தா’, ‘சென்னை 28’, ‘மாநாடு’ உள்ளிட்டப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது தனது குருநாதரும், இயக்குநருமான லிங்குசாமி வழியில், தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்ஜி அமரன், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தற்காலிகமாக ‘என்.சி.22’ எனப் பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியிடப்படும் என்று, இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. காவல்துறை சம்பந்தமான கதைக்களம் என்பதால் இந்தப் படத்திற்கு ‘கஸ்டடி’ என்று பெயரிடப்பட்டுள்ளநிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமையக்கின்றனர்.