Ayalaan Movie Director Ravikumar
Ayalaan Movie Director Ravikumar pt desk
சினிமா

"யாருக்காக படம் எடுத்தோமோ அவர்கள் ஹேப்பி; விமர்சனங்களை ஏற்கிறேன்” - அயலான் இயக்குநர் ரவிக்குமார்!

webteam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சல் படமான அயலான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கருத்துகளை அறிந்து கொள்ள அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் திருப்பூரில் உள்ள சக்தி திரையங்கிற்கு இன்று வருகை தந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, படம் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ரசிகர்களுடனும் பொது மக்களுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Director Ravikumar

இதனை தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக உரையாடலில் இயக்குனர் ரவிக்குமார் பேசிய போது,

எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலான் படம் பற்றிய கருத்துக்களை கேட்பதற்காக இன்று எனது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்துள்ளேன். இங்கு மக்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அயலான் படம் நன்றாக இருப்பதாகவும் புதுவிதமான உணர்வை தூண்டி இருப்பதாகவும், தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து இருப்பதாகவும் ரசிகர்கள் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அயலான் படம் திரைக்கு வருவதற்கு பல்வேறு கட்ட போராட்டங்களை சந்தித்து ஆறு ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு எது சரியில்லையோ அதனை அடுத்த படத்தில் திருத்திக்கொள்ள முயற்சி செய்வேன். தமிழ் திரையுலகில் சயின்ஸ் பிக்சல் மாதிரியான படங்களை இயக்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Director Ravikumar

எனது அடுத்த படைப்புகளிலும் சயின்ஸ் பிக்சல் தொடர்பான புதிய முயற்சிகளை படமாக இயக்க திட்டமிட்டுள்ளேன். வரும் காலங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சிவகார்த்திகேயன் உடன் மட்டுமின்றி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது. வரும் காலங்களில் அது நிறைவேறும் என நினைக்கிறேன்” என்றார்.