சினிமா

தயாராகிறது முதல்வன் -2: ரஜினி நடிக்கிறார்!?

தயாராகிறது முதல்வன் -2: ரஜினி நடிக்கிறார்!?

webteam

முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கதையாசிரியர் கே.வி. விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர் கே.வி.விஜயேந்திர பிரசாத். இயக்குநர் ராஜமவுலியின் தந்தையான இவர் தற்போது விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் முதல்வன் படத்தின் -2ம் பாகம் குறித்து தகவலை தெரிவித்துள்ளார்.

முதல்வன் படத்தை உருவாக்கியவர்கள் என்னை சந்தித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதச் சொல்லி கேட்டார்கள். அந்தக் கதையை தற்போது எழுதி முடித்துவிட்டேன். அதை தயாரிப்பாளரிடம் கொடுக்க இருக்கிறேன். இந்தப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற விவரம் எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால், முதல்வன் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இப்படத்தையும் இயக்க வாய்ப்பு இருக்கிறது. 2.0 படத்தை முடித்த பிறகு தான் லைகா நிறுவனம் இப்படத்தின் கதையை எழுத என்ன்னை தொடர்பு கொண்டனர். ஷங்கர் இப்படத்தை இயக்க ஆவலாக இருப்பதாகவும் கூறினர். ஆனால், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை’என அவர் தெரிவித்துள்ளார். 


1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மணிஷா கொய்யராலா நடித்த அரசியல் படமான முதல்வன் மாபெரும் வெற்றிபெற்றது. இந்தப்படத்தில் நடிக்க ஷங்கர், ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அரசியல் படமாக இருப்பதால் அந்த காலகட்டத்தில் இந்தப்பட வாய்ப்பை ரஜினி தவிர்த்தாகவும் கூறப்பட்டது. அப்போதைய சூழலில் அரசியல் நிலைப்பாட்டில் ஆர்வம் கொள்ளாமல் இருந்து வந்தார் ரஜினி. தற்போது அவர் அரசியலுக்கு வரும் நோக்கத்தில்செயல்பட்டு வருகிறார். இதனால் அப்படியொரு படத்தில் நடிக்கும் ஆர்வம் ரஜினிக்கு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரித்து இருக்கிறது. ஜனவரி மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள முதல்வன் -2 படத்தில் ரஜினி மீண்டும் கைகோர்க்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. முதல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போது வருத்தமளிப்பதாக ரஜினி ஏற்கெனவே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார்.