Yen Ennai Edho Seidhai  Review
திரை விமர்சனம்

காதல் கதையாக ஈர்க்கிறதா `ஏன் என்னை ஏதோ செய்தாய்'? | Yen Ennai Edho Seidhai Review

பரபரப்பான களமோ, அதிரடி திருப்பங்களோ இல்லாத ஓர் இயல்பான படமாக உருவாக்கி இருக்கிறார் ஆண்டனி

Johnson

தனிமையில் சிக்கித் தவிக்கும் ஒருவனுக்கு காதலால் ஏற்படும் மாற்றமே `ஏன் என்னை ஏதோ செய்தாய்'.

கார்த்திக் (ஆண்டனி) தனிமையால் பாதிக்கப்பட்ட, சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கடந்துவந்த இளைஞர். இரண்டு நெருங்கிய நண்பர்கள், அவ்வப்போது பாலியல் தொழிலாளியுடன் உறவு என நாட்களை கடத்துகிறார், கார்த்திக். அப்படி அவர் சந்திக்கும் பாலியல் தொழிலாளி மது (மதுமிதா தாஸ்). ஆரம்பத்தில் உடல் சார்ந்த உறவாக தொடங்கும் இவர்களின் தொடர்பு, பின்னர் அன்பு, புரிதல் மற்றும் காதல் நிறைந்த உறவாக மாறுகிறது. இந்தக் காதல் அவர் வாழ்கையை எப்படி மாற்றுகிறது என்பதே மீதிக்கதை.

பரபரப்பான களமோ, அதிரடி திருப்பங்களோ இல்லாத ஓர் இயல்பான படமாக உருவாக்கி இருக்கிறார் ஆண்டனி. அதற்காவே அவரைத் தனியாகப் பாராட்டலாம்.

வழக்கமான காதல் கதையைத் தாண்டி, தனிமை, தவறான பழக்கங்கள், எதிர்பாராத உறவு மற்றும் காதலால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் என படம் நகர்கிறது. கார்த்திக் என்ற பாத்திரத்தை விவரிப்பது, காமெடி என்ற பெயரில் அவர் அர்த்தமில்லாமல் நடந்துகொள்வது எனப் பல விஷயங்களைக் காட்டி கதாபாத்திரங்களின் குணத்தைக் கடத்தும்படியான ட்ரீட்மென்ட் நன்றாக இருக்கிறது.

படத்தின் மற்ற பாத்திரங்களிலும்கூட இது பிரதிபலிக்கிறது. படத்தின் உரையாடல்களையும் மிக அழுத்தமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தின் குறைகள் என எடுத்துக் கொண்டால், மிகச் சின்ன ஒரு விஷயத்தை இரண்டரை மணிநேர படமாக மாற்றிய விதம். தேவைக்கு அதிகமாக படத்தை இழுக்கும் போது திரும்பத்திரும்ப ஒரே விதமான காட்சிகள் வருகின்றன. படத்துடைய முக்கியமான சில விஷயங்களைப் பார்வையாளர்கள் ஊகித்து முடித்தாலும், அந்தக் காட்சி முடியாமல் ஓடுகிறது. மொத்தத்தில் படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஒரு நல்ல முயற்சி என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.