ஒரு குடும்பத்தின் பயணத்தைச் சொல்வதே, `மெல்லிசை'.
தீபக் (ஜஸ்வந்த் மணிகண்டன்) யாழினி (தன்யா வர்ஷினி) தங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை கடன் பிரச்னை காரணமாக விற்கும் முன், கடைசியாக ஒருமுறை அவ்வீட்டைப் பார்க்கச் செல்கின்றனர். கூடவே, படம் அவர்களின் கடந்த காலத்துக்கு செல்கிறது. தீபக், யாழினியின் பெற்றோர் ராஜன் (கிஷோர்) - வித்யா (சுபத்ரா ராபர்ட்).
ராஜன் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் அதே பள்ளியில் கணித ஆசிரியை வித்யா. பள்ளியில் வேலை என்றாலும் ராஜனுக்கு பாடல் பாடுவதில் தனி ஆர்வம். அதனை மகள் யாழினி ஊக்குவித்தாலும் சுற்றமும், பள்ளியும் வேண்டாம் என அழுத்தம் கொடுக்கிறது. இளம் வயதிலேயே மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டதால், அப்பாவை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நகர்கிறார் தீபக். ஒருகட்டத்தில் வேலையா, கலையா என்ற கேள்வி ராஜன் முன் வருகிறது. அதன்பின் என்ன ஆனது? தீபக் கடன் பிரச்னை என்ன ஆனது என்பதை எல்லாம் சொல்கிறது ’மெல்லிசை’.
ஒரு குடும்பத்தின் கதையை அதன் நினைவுகளின் வழியாகப் பேச நினைத்திருக்கிறார், இயக்குநர் திரவ். அதில் ஒரு சில தருணங்கள் மிக அழகாகவும் வந்திருக்கிறது.
ராஜன் பாத்திரத்தில் கிஷோர், மாணவர்களிடம் பொறுமையாகப் பேசுவது, பொறாமை பிடித்த தலைமை ஆசிரியரிடம் கோபம் கொள்வது, குடித்துவிட்டு வீட்டில் வந்து சண்டையிடுவது எனப் பல எமோஷனலான காட்சிகளில் கவர்கிறார். கணவனிடம் மகனுக்காகப் பேசுவது, கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பது என சுபத்ரா நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அப்பாவிடம் ஒட்டாமல் வாழும் ஜஸ்வந்த், அப்பாவைக் கொஞ்சி வாழும் மகளாக தன்யா என இருவரின் நடிப்பிலும் குறை ஏதும் இல்லை. தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு, ஷங்கர் ரங்கராஜன் இசை இரண்டும் படத்துக்கு ஓரளவு பலம் சேர்க்கிறது.
குடும்பம் என்ற அமைப்பு இயங்கும் விதம், தந்தை மகனுக்கு இடையிலான அன்பு, வளர்ந்தபின்பு கனவுகளே காணக்கூடாதா என்ற கேள்வி என இப்படம் சில விஷயங்களைத் தொடுகிறது. அவை எல்லாமே முக்கியமான விஷயங்கள். படம் மொத்தமுமே பிள்ளைகளின் நினைவுகள்மூலம் சொல்லப்படுவதும், இப்போது அவர்களுக்கு மிஞ்சி இருக்கும் ஒரே நினைவு அந்த வீடுதான் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் இடமும் சிறப்பு.
இப்படத்தின் பிரச்னை என்ன என்றால், கதை இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம் என்பதே. ஒரு குடும்பத்தின் கதை என்றால், அதற்குள் நடந்த விஷயங்களை முன்வைத்து இன்னும் நல்ல, அழுத்தமாக காட்சிகளை எழுதி இருக்கலாம். மேலும் அதன் திரைக்கதையும் கோர்வையாகவே இல்லாமல் துண்டுதுண்டாக நகரும் உணர்வாக இருக்கிறது. முக்கியமாக, எமோஷனலாக படத்தின் பாத்திரங்கள் மீது நமக்கு ஒரு பிணைப்பே ஏற்படவில்லை என்பதால், அவர்களுக்கு வரும் சிக்கல்கள் குறித்தும் நமக்குக் கவலை ஏற்படாமல் போகிறது. மகனின் திறமை, தந்தையின் பாடகர் கனவு, தலைமை ஆசிரியரை பேசியே திருத்தும் மனைவி என இந்த விஷயங்கள் அனைத்துமே இயல்பாக இல்லாமல் மிகச் செயற்கையான ஒன்றாகவே தெரிகிறது. கதையில் இன்னும் அழுத்தம் கூட்டி திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் அழகான அனுபவமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் ஓர் உணர்வுப்பூர்வமான படத்தை, பல குறைகளுடன் கொடுத்துள்ளது இந்த `மெல்லிசை'