காதலை சொல்ல தயங்கும் இளைஞனின் காதல் பயணமே `இதயம் முரளி'
இதயா (அதர்வா) மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மறுநாள் இதயாவுக்கு திருமணம் என்பதால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். விமானத்தில் சந்திக்கும் சூர்யாவிடம் (ஃபகத் பாசில்) தன் காதல் கதைகளை சொல்கிறார் இதயா. பள்ளியில் டீச்சர் மீது க்ரஷ், ட்யூஷனில் சாம் (ப்ரீத்தி முகுந்தன்), கல்லூரியில் அமுதா (கயாடு லோஹர்) என சொல்ல மறந்த காதல் கதைகளை விவரிக்கிறார். எதனால் அவரால் காதலை சொல்ல முடியவில்லை, மறுநாள் திருமணத்தை வைத்துக் கொண்டு இவர் ஏன் அமெரிக்க சென்றார் இவற்றை எல்லாம் விவரிப்பது தான் `இதயம் முரளி'.
கலர் ஃபுல்லான ஒரு படத்தை காதல் + காமெடி கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜி, ஒன்சைட் லவ், அழகான லொகேஷன் என படத்தின் VIBEபிலேயே நம்மை ஈர்த்துவிடுகிறார்கள்.
அதர்வா வழக்கம் போல தன்னுடைய அளவான நடிப்பை இதில் கொடுத்திருக்கிறார். காதலை சொல்ல தயங்கி தயங்கி பின் வாங்குவது, உண்மையை சொல்ல துணிவில்லாமல் தவிப்பது போன்ற காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுக்கிறார். ஹீரோயின்களில் ப்ரீத்தி முகுந்தன் தனித்து தெரிகிறார். கலகப்பாக பேசுவது, ஒரு இடத்தில் உண்மை தெரிந்து உடைவது என அவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலம். கயாடுவுக்கு ஒரு சின்ன ரோல் சொன்னதை மட்டும் செய்து விட்டு போகிறார். மாமா ரோலில் வரும் நட்டி, கெஸ்ட் ரோலில் வரும் பலர் நன்று. அதில் தனி மனிதராக அப்ளாஸ் அள்ளுகிறார் ஃபகத் பாசில். 4 Wall-ஐ பிரேக் செய்யும்படியான அவரது வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தன. டிராவிட், தமன், சுதாகர், நிஹாரிகா குழுவினரின் காமெடிகளும் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவுகின்றனர்.
படத்தின் பெரிய பலமே கதையோ, திரைக்கதையோ இல்லை இப்படத்தை அழகாக பிரசண்ட் செய்திருக்கும் விதம் தான். அதற்கு ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் இருவருக்கும் பெரிய பாராட்டுக்கள். தமன் இசையில் இதயா, தங்கமே தங்கமே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
இப்படத்தின் குறைகள் என பார்த்தால், எந்த வித சுவாரஸ்யமும், எமோஷனல் கனெக்ட்டும் இல்லாமல் செல்லம் கதை தான் முதல் குறை. ஹீரோவின் காதல் கைகூட வேண்டும் என நமக்கு எந்த தாக்கமும் ஏற்படுத்தாத அளவில் தான் படத்தின் கதை இருக்கிறது. ஹீரோவுக்கு வரும் காதல்களில் ஏதாவது சுவாரசியம் இருக்குமா என்றால் ப்ரீத்தி பாத்திரம் சார்ந்து வரும் ஒரு டிவிஸ்ட் மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்ற எல்லாம் மிகவும் வழக்கமாக இருக்கிறது.
தமன் கல்யாணத்தின் போது ஒரு சிக்கல் வரவே இது இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது என பேசுகிறார்கள். அதுவே ஹீரோவின் காதல் என வரும் போது மிக சுயநலமாக எடுக்கப்படும் முடிவுகள் எந்த விதத்தில் சரி என ஒரு கேள்வியும் எழவில்லை. கூடவே என்னை பற்றி யோசிக்க மாட்டாயா என ஹரோயின் கேட்கும் கேள்வியும் காற்றோடு பறக்கவிடப் பட்டு, அதற்கும் ஒரு க்ளோஷர் இல்லை.
இந்த குறைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டால், ஒரு ஆவரேஜ் என்டர்டெய்ன்மென்ட் படமாக முடியும் இந்த `இதயம் முரளி'