'கூட்டத்தில் ஒருத்தன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் த.செ.ஞானவேல். சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய 'ஜெய்பீம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் மூலம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார் ஞானவேல்.
இதற்கு அடுத்து மறைந்த ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி, சாந்தகுமார் சம்பந்தப்பட்ட விஷயங்களை மையமாக வைத்து 'தோசா கிங்' என்ற படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது ரஜினிகாந்தின் `வேட்டையன்' படத்தை இயக்கும் வாய்ப்பு வர, அந்தப் படத்தை இயக்க சென்றார். இப்போது மீண்டும் ஞானவேல் `தோசா கிங்' பட வேலைகளில் பரபரப்பாக இறங்கி இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஹோட்டல் தொழிலில் புகழ்பெற்றவர் மறைந்த ராஜகோபால். அவர் தன் கணவர் சாந்தகுமாரை கொலை செய்து விட்டதாக புகார் அளித்து தமிழகத்தையே பரபரப்பாக்கினார் ஜீவஜோதி. தனக்கான நீதிக்காக ஜீவஜோதி நடத்திய சட்டப் போராட்டத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்க பலரும் விரும்பினார்கள். ஆனால், ஜீவஜோதியிடமிருந்து பாலிவுட் பட நிறுவனமான ஜங்கிலி, ரைட்ஸை வாங்கியது. 'தோசா கிங்' என்ற தலைப்பையும் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
இதில் நீதிமன்ற காட்சிகள் அதிகம் இருப்பதாலும், 'ஜெய்பீம்' படத்தில் நீதிமன்ற காட்சிகள் மிக அழுத்தமாக எடுக்கப்பட்டிருந்தது என்பதாலும் இந்தப் படத்தை த.செ.ஞானவேல் இயக்கினால் சரியாக இருக்கும் எனக் கருதியது ஜங்கிலி நிறுவனம். சில வருடங்களாகவே ஜீவஜோதியின் வாழ்க்கையில் நடந்த பரபரப்புகள் நிறைந்த சம்பவங்களைக் கேட்டு திரைக்கதையைத் தயார் செய்துள்ளனர். மேலும் ஞானவேலும் 'தோசா கிங்' படத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக உழைத்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். இப்படத்தின் எழுத்தில் `சப்த சாகரதாச்சே எல்லோ' இயக்குநர் ஹேமந்த் ராவும் பங்காற்றியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன என்றால், சமீபத்தில் மோகன்லாலை சந்தித்து `தோசா கிங்' கதையை ஞானவேல் சொல்லியிருக்கிறார் எனவும், முழுக்கதையையும் கேட்டு பிடித்துப் போக, மோகன்லால் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.