எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத் துறையில் கால்பதித்த எம்ஜிஆர் அதிலும் உச்சம் தொட்டார். திரைத் துறையில் இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் அதிமுக எனும் கட்சியை தொடங்கினார். மக்களின் செல்வாக்கினால் தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்வில் யாரும் வெல்ல முடியாத சரித்திர நாயகனாகவும் திகழ்ந்தார். திரைத்துறை, அரசியல் இரண்டிலும் அவரின் புகழ் உச்சத்திலே இருந்தது.
எத்தனையோ மாலைகள், பாராட்டுகளை அவர் பெற்றிருந்தாலும் இதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும், சோதனைகளும் ஏராளம். அதனை இன்றைய தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது. அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவான 'காமராஜ்' படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். ஜனவரி 17-ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.