கே.பாக்யராஜ் புதிய தலைமுறை
சினிமா

எம்ஜிஆரின் கலை வாரிசான கே.பாக்யராஜ்.. சாத்தியமானது எப்படி?

சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், நடிகர், கே.பாக்யராஜுவை தனது கலை வாரிசாக அறிவித்திருந்தார்.

Prakash J

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவருடைய நினைவலைகள் குறித்து பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு அந்த காலக்கட்டத்திலேயே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பாக்யராஜ் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார். அப்போது அவர், “எம்.ஜி.ஆர் என்னை கலை வாரிசு என்று அறிவித்த 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பொதுக்கூட்டத்தில், சினிமாவில் நான் செய்ய பல வருடங்கள் எடுத்துக்கொண்ட செயல்களை இந்த பையன் ஆரம்பித்த சில வருடங்களில் செய்திருக்கிறான். எனக்கென்று ஒரு பெரிய மாஸ் வருவதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனது. ஆனால், இவ்வளவு சின்ன வயதில் பாக்யராஜுவுக்கு அந்த மாஸ் கிடைத்துள்ளது. இதனால்தான் அவரை எனது கலை வாரிசு என்று அறிவித்தேன்’ என்று எம்ஜிஆர் தெளிவுபடுத்தியதாக பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.