சினிமா

அசோக் செல்வன் படத்தில் கதாநாயகி மாற்றம்..!

Sinekadhara

அசோக் செல்வனின் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான நிகாரிகா கொனிடேலா. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார்.

சுசீந்தரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஸ்வாதினி இந்த படத்தை இயக்கவுள்ளார். கதாநாயகி மாற்றம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அவர் கூறுகையில், ’’முதலில் நிகாரிகாவைத்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தோம். மார்ச் 20-ஆம் தேதி படப்படிப்பைத் தொடங்க திட்டமிட்டிருந்தோம். கொரோனா காரணமாக படப்பிடிப்பு நின்றுபோனது. இந்த படத்தில் கதாநாயகி டாங்கோ நடனம் ஆடுபவர். அதற்காக நிகாரிகா நடனமும் கற்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்கவுள்ளோம். ஆனால் நிகாரிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. அதனால் அதற்குப்பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளமுடியுமா எனக் கேட்டார். ஆனால் மற்ற நடிகர்களின் கால்ஷீட்டையும் கருத்தில்கொண்டு சமரசமாக படத்தைவிட்டு விலகிவிட்டார் நிகாரிகா.

அவருக்கு பதிலாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சில நடிகைகளை தொடர்புகொண்டோம். ஆனால் சிலர் நடனம் கற்றுக்கொள்ள தயக்கம் காட்டினார்கள். மேகா ஆகாஷிடம் இந்த கதையை சொன்னபோது ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் ஏற்கெனவே சால்சா மற்றும் சா-சா-சா போன்ற நடனங்களை கற்றிருக்கிறார். எனவே இந்த ரோல் அவருக்கு சுலபமாக இருக்கும். இந்த மாத இறுதியில் நடனப்பயிற்சி எடுக்கவுள்ளார்’’ என்று கூறினார்.

மேலும், படப்பிடிப்பு அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. தற்போது தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மேகா விரைவில் இந்த படப்பிடிப்பில் இணையவுள்ளார். ஒளிப்பதிவாளருக்கும், டாங்கோ டான்சருக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை நாடகம் கலந்த கதை இது. லியோன் ஜோன்ஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நிறைய பாடல்கள் இருப்பதால் ஏற்கெனவே பாடல்களை இயக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.