பிரபல ராப் பாடகர் ஹிப் ஹாப் ஆதி, 2015இல் சுந்தர் சி இயக்கிய `ஆம்பள' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்சியாக `இன்று நேற்று நாளை', `தனி ஒருவன்', `அரண்மனை 2' எனப் பல படங்களில் இசையமைப்பளராக பணியாற்றியவர் 2017ஆம் ஆண்டு `மீசைய முறுக்கு' படம் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதன்பிறகு `நட்பே துணை', `நான் சிரித்தால்', `சிவக்குமாரின் சபதம்', `அன்பறிவு', `வீரன்', `PT சார்', `கடைசி உலகப்போர்' போன்ற படங்களில் நடித்தார், இதில் இரு படங்களை (சிவக்குமாரின் சபதம், கடைசி உலகப்போர்) அவரே இயக்கினார். ’மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, படத்தின் இரண்டாம் பாகமான 'மீசைய முறுக்கு 2' எப்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை நாளை மாலை 5 மணிக்கு அறிவிப்போம் என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
'மீசைய முறுக்கு' படம் குறித்து ஆதியின் பதிவில், "இது வெறும் ஒரு கனவாகத் தொடங்கியது. ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது" என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.