சினிமா

நடிகை மஞ்சிமா மோகனுக்கு ஏன் அறுவை சிகிச்சை?

webteam

நடிகை மஞ்சிமா மோகனுக்கு காலில் அறுவை சிகிச்சைச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் ஓய்வெடுத்து வருகிறார். 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மஞ்சிமா மோகன், தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். சமீபத்தில் அவர் நடித்து ’தேவராட்டம்’ படம் வெளியானது. இப்போது, சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்றும் இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. இதனால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

முன்பு சிலர், வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான நிலை என்ன என்பது பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை என்று பதில் கூறியிருக்கிறேன். ஆனால், கடந்த சில நாட்கள் எளிதானதாக எனக்கு இல்லை. அப்போது வந்த மெசேஜ்களுக்கும் போன் அழைப்புகளுக்கும் பதில் சொல்லாததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவம், என்னை வலிமையானவளாக மாற்றி இருக்கிறது. எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதுவும் கடந்து போகும்’’ என்று தெரிவித்துள்ளார். 

அவர் விரைவில் குணமாகி, வலிமையாக வர, ரசிகர்களும் திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.