நடிகை மந்திரா பேடி தனது காதல் கணவர் ராஜ் கௌஷலின் இறுதிச் சடங்குகளை தானே செய்துள்ளது நெகிழ்ச்சியாகவும், மரபுகளை உடைப்பதாகவும் அமைந்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் நடிகை மந்திரா பேடி மற்றும் அவரது கணவரான திரைப்பட இயக்குநரான ராஜ் கௌஷல். கடந்த 1999-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த இணையருக்கு வீர் மற்றும் தாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ராஜ் கௌஷல் மரணமடைந்தார். இந்த தகவல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜ் கௌஷல் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, ராஜ் கௌஷல் இறுதி சடங்கு சில மணி நேரங்கள் முன்பு நடந்தது. இந்த இறுதிச் சடங்கின்போது மந்திரா பேடி கதறி அழுதார். அதேநேரம் கணவருக்கான இறுதிச் சடங்குகளை மரபுகளை உடைத்து மந்திரா பேடியே செய்தார். பாரம்பரிய இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. என்றாலும், தகன சடங்கின்போது உடைக்கப்படும் மண்பானை வழக்கமாக ஆண்களால் தகன மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த மரபுகளை உடைத்து மண்பானைகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து இறுதிச் சடங்குகளையும் மந்திரா பேடியே முன்னின்று தனது காதல் கணவருக்காக செய்தார்.