சினிமா

'நண்பகல் நேரத்து மயக்கம்' - லிஜோ ஜோஸ் பல்லிசேரியுடன் இணைந்த மம்மூட்டி!

PT WEB

'அங்கமாலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு', 'இ.மா.யூ' முதலான படங்களால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பல்லிசேரி. இவர் இயக்கிய படைப்புகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில தினங்கள் முன் இவரின் 'சுருளி' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படத்தை அடுத்து முதல்முறையாக மெகா ஸ்டார் மம்மூட்டி உடன் இணைந்துள்ளார் லிஜோ.

இதுவரை புதுமுகங்கள் மற்றும் சிறிய நடிகர்கள் உடன் மட்டுமே கூட்டணி சேர்ந்த லிஜோ ஜோஸ், மம்மூட்டி போன்ற பெரிய நடிகருடன் இணைவது இதுதான் முதல்முறை. 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தனது நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதன் கதையை லிஜோவும், திரைக்கதையை எழுத்தாளர் ஹரீஷ் என்பவரும் எழுதியுள்ளனர்.

மம்மூட்டி உடன் மூத்த நடிகர் அசோகன் போன்றோரும், புதுமுகங்கள் பலரும் நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்று பழனியில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் எடுக்கப்பட இருக்கிறது. இப்படம் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட இருக்கிறது. வழக்கமாக ஒளிப்பதிவுக்கு கிரிஷ் கங்காதரன் உடன் இணையும் லிஜோ இந்தமுறை தமிழகத்தைச் சேர்ந்த தேனி ஈஸ்வர் உடன் இணைந்துள்ளார். தமிழகத்தை தொடர்புபடுத்திய கதை என்பதால் தேனி ஈஸ்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.