சினிமா

மலையாள நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை? இயக்குநரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை!

ச. முத்துகிருஷ்ணன்

மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் அவர் ஆபத்தில் இருப்பதாகவும் பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. அவருடைய மேனேஜர்கள் பினீஸ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பெயர்களையும் அவர் வீட்டுக்காவலில் இருப்பதாக நம்புவதற்கான காரணங்களையும் நான் பதிவிட்டு இருந்தேன்.


ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, சம்பந்தப்பட்ட வேறு யாரோ பதிலளிக்கவில்லை. மஞ்சு வாரியரின் மௌனம் என் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாளத் திரையுலகில் பாலின சமத்துவத்திற்காகச் செயல்படும் அமைப்பான Women in Cinema Collective அமைப்பிற்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இவ்விஷயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.

இதை நான் இன்று சமூக வலைதளங்களில் கூறும்போது, பலரும் இந்த மிகத் தீவிரமான பிரச்சினையை நகைச்சுவையாகப் பார்க்க முயல்கின்றனர். கேரளாவில் உள்ள ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சமாக உள்ளது. தேசிய அளவில் பாராட்டப்பட்ட ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டிருப்பதால், தேசிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநரின் பதிவைப் பார்க்க: https://m.facebook.com/story.php?story_fbid=5412903042087478&id=100001035072627