மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, 7 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமாக வலம் வருபவர் மம்மூட்டி. இவர், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால், ஃபஹத் பாசில், நயன்தாரா ஆகியோருடன் `பேட்ரியாட்' என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மோகன்லால் - மம்மூட்டி இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் 60% நிறைவடைந்த நிலையில் மம்மூட்டிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் எனவும் தகவல்கள் பரவின. இதற்காக, அவர் சென்னையில் தங்கி இருந்து கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. எனினும், அவரின் நண்பர்களும் சினிமா பிரபலங்கள் பலரும், அவருக்கு சாதாரண உடல்நல பிரச்னைதான் விரைவில் குணமாகிவிடுவார் எனவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால், சபரிமலை சென்று மோகன்லாலுக்காக பிரார்த்தனை செய்த செய்திகளும் பேசுபொருளாகின. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மம்முட்டி உடல்நலம் சீராகிவிட்டது எனவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டார். சமூக வலைதளத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்ட மம்மூட்டி, ”ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, தான் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பினேன்; என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி; கேமரா அழைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.