சினிமா

''வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை'' - இந்தியன்2 விபத்து குறித்து லைகா அறிக்கை

''வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை'' - இந்தியன்2 விபத்து குறித்து லைகா அறிக்கை

webteam

இந்தியன்2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு லைகா நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். பிப்ரவரி 7‌ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இ‌ரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் சிக்கிய உதவி இயக்குநர் கிருஷ்ணா,‌ தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.

விபத்து ஏற்படுவதற்கு சற்றுமுன்னர்தான் கமல்ஹாசனும், ஷங்கரும் படப்பிடிப்பு முடிந்து அரங்கை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. எனினும் விபத்து குறித்து கேள்விப்பட்டு இருவரும் அங்கு வந்து காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கமல்ஹாசன், ஷங்கர் இருவரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இந்த விபத்து மிகக் கொடூரமானது என்றும் 3 சகாக்களை இழந்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது வலியை விட அவர்களை இழந்து வாழும் குடும்பத்தின் துயரம் பன்மடங்கு எனக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிடுவார்கள் என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

விபத்தில் உயிரிழந்த மூவருக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா இரங்கல் தெரிவித்துள்ளது. தாங்கள் உணரும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும், கடின உழைப்பாளர்கள் மூன்று பேரை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்களை இழந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் லைகா தெரிவித்துள்ளது.