சினிமா

'உற்சாகத்தில் ஆடுகிறேன்' - மகேஷ் பாபு பாராட்டால் குஷியான அசோக் செல்வன்

webteam

சத்தமில்லாமல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ’ஓ மை கடவுளே’. அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. அஷ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.

ஆண், பெண் நட்பு, காதல் என பல விஷயங்களை நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும் இந்தப்படம் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்நிலையில் இந்தப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி இருந்தது. சிறந்த கதை மற்றும் நல்ல இயக்கம் என இயக்குநரையும் பாராட்டியுள்ளார். அசோக் செல்வன் நேச்சுரலராக நடித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் பதிவுக்கு பதிலளித்துள்ள அசோக் செல்வன், இது உண்மையாகவே ஓ மை கடவுளே மொமண்ட் தான். நன்றி சார். நான் பெரிய ரசிகன். உற்சாகத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் பாராட்டுக்கு ஓ மை கடவுளே படக்குழுவினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.