சினிமா

நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி

webteam

சென்னை சாந்தி திரையரங்க சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான ராம்குமார், பிரபு ஆகியோர் ஏமாற்றி விட்டதாக, சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், சாந்தி திரையரங்க பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு முடியும் வரை சொத்துக்களை விற்க இடைக்கால தடை விதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கூடுதல் மனுக்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்த போது, நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சாந்தி தியேட்டர் பங்குகள் அனைத்தும் 2010ஆம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகும், அவர்களின் குடும்பப் பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. அதனையடுத்து, சிவாஜி கணேசனின் 2 மகள்கள் தொடர்ந்த கூடுதல் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிக்கலாமே: மீண்டும் முட்டுக்கட்டை போடும் தென்னிந்திய சினிமா? - தாக்குப் பிடிக்குமா பாலிவுட் படங்கள்