சினிமா

”பயத்திற்கு நடுவே படப்பிடிப்பை நடத்துகிறோம்” ’7த் சென்ஸ்’ குறித்து மாதவன்

Sinekadhara

அலைபாயுதே, இறுதிச்சுற்று, 3 இடியட்ஸ், ரங் தே பசந்தே போன்ற பல தமிழ் மற்றும் இந்தி படங்கள் மூலம் கோலிவுட், பாலிவுட் என மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் எல்லோராலும் செல்லமாக ’மேடி’ என்று அழைக்கப்படுகிற மாதவன். சமீபத்தில் அவர் படங்கள் ஓடிடியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. ப்ரீத் 1 இல் அவர் ஏற்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு பலரின் பாராட்டையும் பெற்றார்.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு ஹிந்தியில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ’7த் சென்ஸ்’ படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. கொரொனா பொதுமுடக்கத்திற்கு பிறகு துபாயில் நடக்கும் முதல் பாலிவுட் ஷூட்டிங் இது.

துபாயில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் கொரோனா காரணமாக எங்கும் வெளியே செல்லமுடியவில்லை. அனைவரும் மிகவும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் படப்பிடிப்பை நடத்திவருகிறோம் என கலீஜ்டைம்ஸில் பேசியுள்ளார் மாதவன்.

1965இல் விஜய் ராஸ், ரோஹித் ராய், தனுஜ் விர்வானி போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த’7த் சென்ஸ்’ படத்தின் ரீமேக் இது. இதுபற்றி மாதவன் கூறுகையில், கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சற்று பயமாக இருந்தாலும், தகுந்த பாதுகாப்புடனும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் நடத்திவருகிறோம். மேலும் மிகக்குறைந்த ஆட்களை வைத்தே படப்பிடிப்பை நடத்துவது சற்று கடினமாக உள்ளது. இந்த பயத்திற்கு நடுவே படப்பிடிப்பை நடத்துவதும் ஸ்வாரஸ்யமாகத்தான் உள்ளது என அவர் கூறியுள்ளார்.