சினிமா

நாளை தொடங்குகிறது ‘மாநாடு’ படப்பிடிப்பு - உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்..!

webteam

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.

கடந்த 3ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து அவரது திரை வாழ்க்கை வேகம் எடுத்துள்ளது என்றே கூறலாம். அவரது நடிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு, அதன் பின் சில சமரச முயற்சிகள் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிம்பு ஆகிய இருவருக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டது.

அதனை அடுத்து கடந்த வாரம் ‘மாநாடு’ படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த விவரங்களை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த முதற்கட்ட படப்பிடிப்பு குறைந்தபட்சம் இரு மாதங்கள் நடைபெற உள்ளது. ஆகவே படத்தின் 90 சதவீத வேலைகள் இந்தக் காலகட்டத்திற்குள்ளாகவே முடிவடைந்துவிடும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. பல்வேறு சிக்கல்கள் நடுவில் சிக்கித் தவித்த இந்தப் படம் ஒருவழியாக தொடங்க உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஏனெனில், சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில மாதங்கள் ஆகப்போகிறது. சில படங்களுக்காக அவர் பாடல்களை மட்டும் பாடிக் கொடுத்து கொண்டிருந்தார். அதனையடுத்து இடைவெளிக்குப் பின் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், சில நாட்களாக சிம்பு உடற்பயிற்சி செய்து வந்தார். அதற்கான வீடியோக்கள் கூட வெளியாகி இருந்தன. ‘மாநாடு’ படப்பிடிப்பு சென்னையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்த பின்னர், மீதமுள்ள காட்சிகள் இந்த மாதம் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

‘மாநாடு’ படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இதில் இயக்குநர் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா என மூன்று பெரிய இயக்குநர்களும் நடிக்க உள்ளனர். அண்ணன் படம் என்பதால் வழக்கம் போல் பிரேம்ஜியும் இதில் நடிக்கின்றார். இது அரசியல் கலந்த த்ரிலர் படமாக உருவாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். முதன்முறையாக சிம்புவுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தின் மூலம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.