சினிமா

“இயக்குநர் மற்றும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் படப்பிடிப்பு இருந்தது”- கமலுக்கு லைகா பதில்

webteam

 ‘இந்தியன் 2’ விபத்து தொடர்பாக கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைகா பதில் கடிதம் அனுப்பியுள்ளது

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மது, கிருஷ்ணா மற்றும் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். கிரேனை இயக்க தெரியாமல் மரணத்தை ஏற்படுத்தியதாக ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதுகுறித்து இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரனுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “இனி திரைப்படம் தயாரிக்கும்போது ஹீரோ முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் கடிதத்திற்கு லைகா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் ''உங்களின் கடிதத்திற்கு முன்பாகவே விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டோம். இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் எந்த குறையும் வைக்கவில்லை.

லைகா நிறுவனம் உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களது மற்றும் இயக்குநரின் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும்தான் முழுப்படப்பிடிப்பும் இருந்தது என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம்'' என தெரிவித்துள்ளது.