சினிமா

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி அளித்த ’லைக்கா’ சுபாஷ்கரன்

sharpana

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக லைக்கா தயாரிப்பு நிறுவனத்தினர், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள்  தாணு, ’கோகுலம்’ கோபாலன் உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கிய நிலையில், இன்று லைகா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் லைக்கா நிர்வாகிகள் தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழில் கவனம் ஈர்த்த ‘கத்தி’,  ‘கோலமாவு கோகிலா’, ’வடசென்னை’ ‘செக்க சிவந்த வானம்’, ’தர்பார்’ உள்ளிட்டப் படங்களை லைக்கா நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தையும், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தையும் லைக்கா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ தமிழ் உரிமையையும் லைக்கா நிறுவனம்தான் கைப்பற்றியிருக்கிறது.