சினிமா

”விரைவில் இசைப் பயணத்தைத் தொடரலாம்” : ரஹ்மானுக்கு பதிலளித்த இளையராஜா

sharpana

'துபாய் எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுள்ள இளையராஜா ஏ.ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தபோது ”எங்கள் ஸ்டூடியோவுக்காக ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன்" என்று இளையராஜாவிடம் ஏ.ஆர் ரஹ்மான் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இன்று பதிலளித்துள்ளார் இளையராஜா.

துபாயில் நடைபெறும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த இசைக்கச்சேரிக்கு பிறகு, துபாயில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா சென்றார். அங்கு அவரை ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்று ஸ்டூடியோவை சுற்றிக் காண்பித்தார். பின்னர், இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து,

"மேஸ்ட்ரோவை எங்களின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன்" என்று கோரிக்கையும் வைத்திருந்தார். அதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ள இளையராஜா, “உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசைப் பயணத்தைத் தொடரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்து வந்துள்ள இந்த தகவல்களால் இருவரின் ரசிகர்களும் இசைப்பிரியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிலர் இது கனவா? நிஜமா? என பதிவிட்டு வருகிறார்கள்.