சினிமா

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் - போண்டா மணி உருக்கம்

webteam

உடல் நலம் பெற்று மீண்டும் நடித்து பொதுமக்களை சிரிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படுவதாக திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி தெரிவித்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி சிகிச்சை முடிந்து போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான தொகையை வழங்கி உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி கூறுகையில்... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து நலம் விசாரித்தார். முதல்வர் சார்பில் முதல்வரின் உதவியாளர் அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். நான் உழைத்த கட்சி சார்பில் யாரும் வந்து நலம் விசாரிக்காதது மன வருத்தம் அளித்தது.

இந்நிலையில் இன்று இரு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எனது இல்லம் தேடிவந்து நலம் விசாரித்து நிதி உதவி வழங்கியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது உடல்நிலை அறிந்து உதவிய நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருக்கு மிக்க நன்றி. நான் ரஜினி அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்துள்ளேன். எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் என் துறை சார்ந்தவர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என நம்புவதாக உருக்கமாக கூறினார்,

நான் உடல்நலம் பெற்று மீண்டு வந்து மக்களை சிரிக்க வைக்க நடிக்க வேண்டும் என தெரிவித்தார்.