இந்திய இசைக்குயில் லதா மகேஷ்கர் பிறந்த நாளை இன்றைக்கு பாலிவுட் சினிமா உலகம் பெருமையாக கொண்டாடி வருகிறது.
’தேரே மேரே பீச் மைய்ன் ஹைசா ஹை ஏக் பந்தன் ஆஜா’ என்ற பாடலை மறக்க முடியுமா? பாலிவுட் எல்லைகளை கடந்து பல மைல் தூரங்களுக்கு அப்பால் போய் சேர்ந்த பாடல் இது. இந்தி தெரியாதவர்களை கூட இப் பாடலை இனிப்பாக உச்சரிக்க செய்தார் லதா மகேஷ்கர். அதற்கு அவரது குரல்தான் காரணம்.
மத்திய பிரதேசம் இந்தூரில் 1929ல் பிறந்தவர் லதா. இவரது தந்தை இந்துஸ்தானி சங்கீத மேதை. கூடவே ஒரு நாடக நடிகர். இந்தப் பின்புலத்தில் பிறந்ததால் இவரது பள்ளிப்படிப்பு பாதியிலேயே முடிந்து போனது. படிப்பதை நிறுத்திய இவர் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். நடிப்புடன் சேர்ந்து பாடவும் செய்தார். அவரது குரல் பரவலாக கவனிக்கப்பட்டது. இந்த இசை ஈடுபாட்டை உணர்ந்த அவரது தந்தை, அமனந்தன் கான் சகோப் எனும் இசை ஆசிரியரிடம் முறைபடி சங்கீதம் கற்க அனுப்பி வைத்தார். லதாவின் 13 வயதில் திடீரென்று அப்பா இறந்துவிட வருமானம் இல்லாமல் திண்டாடியது குடும்பம். கஷ்டத்தை போக்க திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் லதா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டே பாடவும் செய்தார். பழைய மேடை அனுபவம் சினிமாவுக்கு கை கொடுத்தது.
1942ல் ‘கிதி ஹசால்’ என்ற மராத்தி சினிமா பாடலை முதன்முறையாக பாடினார் லதா. அதன் பின் மஜ்பூர், பர்சாத், அந்தாஸ், துலாரி என ஏகப்பட்ட வாய்ப்புகள். ‘ஆயஹா..ஆஹயா ஆனோவாலா’ பாடல்தான் பலரது கவனைத்தை இவருக்கு சம்பாத்தித்து கொடுத்தது. இப்பாடல் பாலிவுட் பார்வையை இவரது பக்கம் திருப்பி விட்டது. நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்பு குவிந்தன. இவர் எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் உச்சரிப்பை சிதைக்காமல் பாடிக் கொடுப்பதை கொள்கையாக கொண்டிருந்தார். தமிழில் லதா பாடினால் அது தமிழ் தெரியாத பாடகி பாடியது என்று யாரும் குறை கூற முடியாது. அந்தளவுக்கு ஸ்ருதி சுத்தம். அட்சர சுத்தம் அதில் இருந்தது.
சினிமா இசை உலகின் உச்சமாகத் திகழ்ந்தார் லதா. உலகின் அதிக அளவு பாடல்களை பாடிய பாடகி இவர்தான். ஏறக்குறைய ஆயிரம் பாடல்கள் வரும். இந்த சாதனை கின்னஸ் புத்தகம் இவரை அழைத்து போனது. பாரத் ரத்னா, தாதாசாகோப் பால்கே விருது, ராஜீவ் காந்தி விருது, பத்ம விபூஷன் விருது, நூர்ஹகான் விருது, மஹாராஷ்டிரா ரத்னா விருது என பல புகழ் மாலைகள் இவரது கழுத்தில் விழுந்து கெளரவம் சேர்த்தன. இந்த மெலடி குயின் 1999-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று 88 வயதை நிறைவு செய்திருக்கும் இவரது குரலுக்கு என்றும் 20 வயதுதான்.