சினிமா

தவறான தேசியக்கொடியை பதிவிட்ட குஷ்பு மன்னிப்புக்கேட்டு ட்வீட்

Sinekadhara

குடியரசு தின வாழ்த்தில் தவறான தேசியக் கொடியை தனது ட்வீட்டில் பதிவிட்டதற்காக பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சுந்தரும் தனது குடியரசு தின வாழ்த்தை, ’’அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் பெருமைமிகுந்த குடியரசு தின வாழ்த்துகள்’’ என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில் ஜெய்ஹிந்த் என்ற ஹேஷ்டேக்குடன் இந்திய நாட்டின் தேசியக்கொடிக்கு பதிலாக மேற்கு ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டுக்கொடியை பதிவிட்டிருந்தார்.

இது அவரை, நெட்டிசன்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக்கியது.

இதனால் தனது ட்வீட்டை நீக்கிய குஷ்பு அதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அதில், ‘’தனது தவறை ஏற்றுக்கொண்டு அதற்கு மன்னிப்புக் கேட்பவர் தைரியமானவர். குடியரசு தினத்தை முன்னிட்டு தெரிவித்த வாழ்த்தில் தவறான கொடியை ட்வீட் செய்ததற்காக மன்னிப்புக் கேட்கிறேன். பகிர்வதற்கு முன்பு என்னுடைய கண்ணாடியை அணியாததை நினைத்து வருந்துகிறேன். இது ஏற்கத்தக்கதல்ல என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னை மன்னிக்கமுடிந்தால் மன்னிக்கவும்’’ என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.