சினிமா

உதவுவது போல நடித்து... தனக்கு நடந்த #MeToo கொடுமைகளை புத்தமாக எழுதிய பாலிவுட் நடிகை!

JananiGovindhan

நெருங்கிய நண்பர் ஒருவரால் இரண்டரை ஆண்டுகளாக தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து பிரபல நடிகையும், மாடல் அழகியுமான குப்ரா சேட் தற்போது வெளிப்படுத்தியிருப்பது பாலிவுட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்கேர்ட் கேம்ஸ் வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமான குப்ரா சேட் இந்தியில் ரெடி, சுல்தான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக இருந்த இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வந்திருக்கிறார்.

இந்த நிலையில், இளம் வயதில் தனக்கு நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரால் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து 'Open Book: Not quite a Memoir'என்ற தலைப்பில் தானே எழுதியுள்ள புத்தகத்தில் விரிவாக குப்ரா சைட் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான செய்தி தொகுப்பை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.

அதில், தன்னுடைய குடும்ப சூழலை கருத்தில் கொண்டு இந்த கொடுமைகளை இரண்டரை ஆண்டுகளுக்கு பொறுத்துக் கொண்டதாக குப்ரா சேட் குறிப்பிட்டுள்ளார்.

இவையெல்லாம் பெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்திற்கு சாப்பிட சென்ற தொடங்கியதில் இருந்து ஆரம்பித்திருக்கிறதாம். திருமணமான அந்த நபரை குப்ராவும் அவரது சகோதரரும் UNCLE என்றே அழைத்து வந்திருக்கிறார். ஒரு நாள் அந்த நபர் குப்ராவை அழைத்து தன்னை X என்றே அழைக்குமாறு அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.

எங்கள் குடும்பத்தின் பண நெருக்கடியை சில நிமிடங்களிலேயே தீர்த்து வைத்த அந்த X எங்களின் நண்பராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆனார் என குப்ரா சேட் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வதும் என் அம்மா முன்பே கண்ணத்தில் முத்தமிடுவதும் தொடர்ந்தது. ஆனால் அம்மா எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருமுறை காரில் சென்ற போது முன் புறமிருந்து என்னுடைய தொடையில் சீண்டுவதும் போன்ற தொல்லைகளும் நடந்தது.

ஒருநாள், அம்மா அப்பா இருவருக்கு சண்டை நடந்தபோது செய்வதறியாது X -ஐ அழைத்து அதனை தீர்த்து வைக்குமாறு கேட்டபோது, அவர் என்னைப்பற்றி கவலையுறுவதாகவும், ஹோட்டலில் வந்து சந்திக்கும்படியும் கேட்டார். பின்னர் அங்கு அழைத்து சென்று முத்தமிட்டார். இவை எதுவும் நடந்திருக்கக் கூடாது. ஆனால் நடந்தது. சத்தமிடுவதற்கு பதில் அமைதியாக இருந்துவிட்டேன் என குப்ரா கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, இப்படியாக 2.5 ஆண்டுகளுக்கு இந்த கொடுமைகளை பொறுத்துக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் என்னுடைய பட்டப்படிப்பு முடிந்து துபாய்க்கு குடியேறியதை அடுத்து இந்த அத்துமீறல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன.

இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பிறகே நடந்தவை பற்றி என் அம்மாவிடம் கூறினேன். அவர் குற்ற உணர்ச்சியில் அழுதார். மன்னிப்பும் கேட்டார் என குப்ரா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்த புத்தக குறிப்பு தான் பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.