சினிமா

`அவதார்: தி வே ஆப் வாட்டர்' பிரபலங்கள், இந்தியா வருவதற்கு ஆர்வம்! ஏன் தெரியுமா?

PT

13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ‘இந்தியா டுடே’ பத்திரிகைக்கு அளித்துள்ளப் பேட்டியில், அப்படத்தில் நடித்துள்ள பிரபல நட்சத்திரங்கள் இந்தியாவிற்கு வர விரும்புவதற்கான காரணம் குறித்து ஆர்வத்துடன் விளக்கியுள்ளனர்.

2009-ல் வெளிவந்த ‘அவதார்’ திரைப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து பண்டோராவின் மூச்சுக்காற்றுடன் இணைக்கும் வகையிலான திரைப்படமாக அவதாரின் 2-ஆம் பாகம் 'தி வே ஆப் வாட்டர்'  உருவாகி வந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை வெளியாகவுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகும் இப்படம், உலக மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் வெளியான டாப் ஹிட் படங்களின் பட்டியலில் இப்படம் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

வர்த்தக ஆய்வின்படி ‘அவதார் 2’ நிச்சயமாக ஒரு பெரிய தொடக்கமாக இருக்கும் என்றும், இந்தியாவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள ரசிகர்களுடன் ஏற்பட்ட உணர்வு ரீதியிலான தொடர்பு காரணமாக இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வர விரும்புவதாக படத்தின் நடிகர்கள் ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் தெரிவித்துள்ளனர்.

மேலும், படப்பிடிப்பின் போது உருவான ஆழமான குடும்ப ரீதியிலான பிணைப்பு குறித்தும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்த படத்தின் சிறப்பான வெற்றியைக் காண பார்வையாளர்களுடன் , படத்தின் நட்சத்திரங்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

-ஷர்நிதா