சினிமா

இயக்குனர் பிரியதர்ஷனுக்கு கிஷோர் குமார் விருது!

webteam

இயக்குனர் பிரியதர்ஷனுக்கு மத்திய பிரதேச அரசால் வழங்கப்படும் கிஷோர் குமார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில், சின்னமணிக்குயிலே, கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், சில சமயங்களில், நிமிர் ஆகிய படங்களை இயக்கி இருப்பவர் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன். இவர் இந்தியிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு மத்திய பிரதேச அரசு, பாடகர் கிஷோர் குமார் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது திரைப்பட இயக்கம், நடிப்பு, திரைக்கதை, பாடல்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இதுபற்றி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இந்த விருது ஆச்சரியமளித்தது. தென்னிந்தியாவில் இருந்து இந்த விருதை முதன் முதலாக பெறுபவன் நான்தான். நான் கிஷோர் குமாரின் பெரிய ரசிகன். அந்த பெரும் பாடகர் பிறந்த வீட்டுக்குக் கூட சென்று பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு கிடைத்தது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த விருதை இதற்கு முன் ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷ்யாம் பெனகல், அமிதாப்பச்சன், யாஷ் சோப்ரா ஆகியோர் பெற்றிருக்கிறார்கள்.

(கிஷோர் குமார்)

இந்த விருது, இந்தூர் அருகில் உள்ள கிஷோர் குமார் வீட்டில் நடக்கும் விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானால் பிரியதர் ஷனுக்கு வழங்கப்படும்.