சினிமா

“தவிர்க்க முடியவில்லை” - கே.ஜி.எஃப் நடிகர் யஷிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்

கலிலுல்லா

கே.ஜி.எஃப் 2 படக்குழுவிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்புக்கேட்டுள்ளார். மேலும் மற்ற நடிகர்களின் எல்லைக்குள் செல்லமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரீலிசாக உள்ளது. அமீர்கான் தயாரித்து நடிக்கும் லால் சிங் சத்தா படமும், யஷ் நடிக்கும் கேஜிஎஃப்2 படமும் வெளியாகிறது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. இந்நிலையில் தனது படமும் அதே தினத்தில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு அமீர் கான் கேஜிஎஃப் படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர் கான், ஏப்ரல் 14 அன்று என்னுடைய லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதன் ஹீரோ யஷிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாக தெரிவித்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அன்றைய தினத்தை தேர்வு செய்திருப்பதாகவும், அதனுடைய காரணத்தை விளக்கி படக்குழுவுக்கு கடிதம் எழுதியதாகவும் நடிகர் யஷுக்கு தொலைபேசியில் அழைத்து விவரித்து மன்னிப்பு கேட்டதாகவும் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆமீர் கான் தெரிவித்ததாவது, ''என் வாழ்க்கையில் முதல் முறையாக சீக்கியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்படியிருக்க பைசாகி தினத்தன்று (ஏப்ரல் 14) அந்த படத்தை வெளியிடுவதே சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன். நான் அடுத்த ஹீரோக்களின் எல்லைக்குள் செல்வதை வெறுப்பவன். என்னால் பிறரின் பிஸினஸ் பாதிக்கப்படக் கூடாது என நினைப்பவன். இருப்பினும் கே.ஜி.எஃப் அதிரடி திரைப்படம், என்னுடையது, காதல் கலந்த குடும்பப் படம். எனவே இரு படங்களின் பிஸினஸும் தனித்தனியாக இருக்கும் என நினைக்கிறேன்.

பிறரை போலவே நானும் கேஜிஎஃப் ரசிகன், ஏப்ரல் 14 அன்று ஏதேனும் ஒரு திரையரங்கில் நானும் கேஜிஎஃப் பார்ப்பேன்'' என தெரிவித்துள்ளார்.