சினிமா

கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- விஜய் சேதுபதி

webteam

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 

கேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநி லத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. பெருமழை மற்றும் வெள்ளத்தால் 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.  

இந்நிலையில் இன்று மாலை கேரளாவுக்கு செல்ல இருப்பதாகவும் எதிர்பாராத வெள்ள நிலவரம் குறித்து பார்வையிட இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல நடிகர்களும் உதவி வருகின்றனர். அதன்படி கமல்ஹாசன் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றும் இணைந்து 50 லட்சம் கேரளா மாநிலத்திற்கு தருவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் கேரள முதல்வரின் நிவாரணநிதிக்கு நடிகர் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளனர். அது தவிர நடிகர் விஷால்,  இன்னும் பல முண்ணனி நடிகர்களும் உதவி வருகின்றனர். இந்த நிலையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.