ஆள் கடத்தல் வழக்கில், நடிகை லட்சுமிமேனன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில், ஆகஸ்ட் 25ஆம் தேதி, ஐடி ஊழியர் உட்பட ஒரு கும்பலுக்கும், நடிகை லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் அடங்கிய கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஐடி ஊழியர் தனது காரில் ஏறி புறப்பட முயன்றபோது, லட்சுமி மேனனின் நண்பர்கள் அடங்கிய கும்பல், ஐடி ஊழியரை தங்கள் காருக்குள் ஏற்றி கடத்திச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், லட்சுமி மேனன் உடன் இருந்த சிலர் ஐடி ஊழியரை தாக்குவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐடி ஊழியர், கொச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடிகை லட்சுமி மேனனுக்கும் இந்த வழக்கில் தொடர்புபிருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆள் கடத்தல் வழக்கில், நடிகை லட்சுமிமேனன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து லட்சுமி மேனன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.