சினிமா

நடிகர் விஜய்யுடன் கேரள பெண் போட்டோ: நக்கல் அடித்தவர்களுக்கு பதிலடி

Rasus

நீண்ட காலமாக நடிகர் விஜய்-யின் தீவிர ரசிகராக இருந்த இளம்பெண் ஒருவர், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன்னை நக்கலடித்த நபர்களுக்கும், புகைப்படம் மூலம் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பொதுவாக பலருக்கும் தங்களுக்கு பிடித்த நடிகர்/ நடிகைகள் என யாரோ ஒருவர் இருப்பார்கள். ஒரு சிலரோ படத்தை பார்த்தோமோ.. அவ்வளவுதான்.. தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். இன்னும் ஒரு சிலர் தான் தங்களுக்கு பிடித்த திரை பிரபலங்களை தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். அவர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். அவர்கள் பின்பற்றும் ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் சென்ஸ் என அனைத்தையும் பின்பற்றுவார்கள். நடிகர்களின் வசனத்தை நா பிறழாமல் உச்சரிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரை வெறித்தனமாக  ரசிப்பார்கள். அதனைப்போன்ற நடிகர் விஜய்-யின் வெறித்தமானமான ரசிகை தான் கேரளாவை சேர்ந்த சரண்யா விகாஷ். தன் வாழ்நாளில் விஜய்யை தவிர வேறு ஒருவரையும் தன்னால் அதிகமாக ரசிக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர். எப்படியாவது வாழ்நாளில் விஜய்யை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும். அதுவே அவரின் லட்சிய கனவாகவே இருந்து வந்தது. விஜய் மீது தான் கொண்ட அன்பு குறித்து ஒவ்வொரு முறையும் தோழிகளிடம் சரண்யா சொல்லும் போது அவர்கள் சரண்யாவை கேலிதான் செய்து வந்திருக்கின்றனர். ‘எப்படியாவது ஒருநாள் விஜய் அண்ணனுடன் நான் போட்டோ எடுத்துக்கொள்வேன். அப்போது பாருங்கள்’ என சரண்யா சொல்லும்போது ‘அதெல்லாம் உன்னால சத்தியமா முடியாது. நடக்காது’ என தோழிகள் நக்கலடித்திருக்கின்றனர். ஆனால் இப்போதோ அவர்கள் எல்லோருக்கும் பதிலடி தரும் விதமாக விஜய் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் சரண்யா.

புகைப்படத்தோடு விஜய்யை சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் சரண்யா. மொத்தமாக 7 விநாடிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள இந்தச் சந்திப்பு சரண்யாவுக்கு வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்றாம். “விஜய் அண்ணா அடிக்கடி ஒன்று கூறுவார். நாம் ஒரு ரயிலில் ஏற வேண்டும் என்றால் அதற்கு முதலில் ரயிலின் நடைமேடைக்கு செல்ல வேண்டும். பின்னர் ரயிலுக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அப்போது தான் ரயிலில் ஏறி பயணம் செய்ய முடியும். அதனை போலத்தான் விஜய் அண்ணனை சந்திக்க நான் சிறிது காலம் காத்திருந்தேன். இப்போது என் கனவு நினைவாகியுள்ளது” என பூரிக்கிறார்.

“விஜய் அண்ணாவை பார்த்தபோது ஒருநிமிடம் என் வாய் அடைத்துப் போனது. அவர் என்னை அவர் அருகில் வரச் சொன்னார். பின்னர் அழகாக சிரித்துக் கொண்டே கேமராவிற்கு என்னை போஸ் கொடுக்கச் சொன்னார். அப்போது நான் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். மறக்கவே முடியாத அனுபவம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் சரண்யா. விஜய் ரசிகர்கள் பலரும் இந்த செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.