சினிமா

'வதந்திகளால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை' - சிரமத்தை பகிர்ந்த நடிகை கங்கனா ரனாவத்

ஜா. ஜாக்சன் சிங்

தன்னை பற்றிய வதந்திகளால் தனக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டலாக கூறியுள்ளார்.

பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக அவர் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். இதனால் அக்கட்சியினருக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள 'தாக்காட்' என்ற திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் உளவாளி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்திருக்கிறார். இந்தி திரைப்பட வரலாற்றிலேயே கதாநாயகி ஒருவர் உளவாளியாக நடித்திருப்பது இதுவே முதன்முறை என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதனிடையே, இந்த திரைப்படத்தின் 'ப்ரோமோ' நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கங்கனாவை பார்த்து, "தாக்காட் படத்தில் வருவதை போல நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் 'டாம்பாய்' ரக பெண் தானா? என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கங்கனா, "என்னை பலரும் 'டாம்பாய் கேர்ள்' என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் ஆண்களை தட்டி கேட்கும் பெண் என எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் நான் அப்படி அல்ல. நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் அமைதியான பெண். யாரையும் நான் இதுவரை அடித்தது கூட கிடையாது. உங்களை போன்ற ஆட்கள் பரப்பி வரும் வதந்திகளால் எனக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட மிகவும் சிரமமாக இருக்கிறது" என கிண்டலாக கூறினார்.