’தலைவி’ படத்துக்காக தமிழ் கற்பது கடினமாக உள்ளது என்று அந்தப் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணவ்த் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ’தலைவி’ என்ற படம் உருவாகி வருகிறது. ஜெயலலிதாவாக கங்கனா ரணவ்த் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த கங்கனா, இந்தப் படத்துக்காக தமிழ் மொழியை கற்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’தமிழ் கற்பது கடினம் என்பதை உணர்ந்துகொண்டேன். அதனால் வசனங்களை மனப்பாடம் செய்து பேசி, நடித்து வருகிறேன். முன்னதாக தமிழ் மொழியை முழுவதும் கற்றுகொள்ளலாம் என நினைத்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதால், கதையின் தேவைக்கேற்ப கற்றுவருகிறேன்’’ என்று தெரிவித்தார். அதோடு படத்துக்காக பரத நாட்டியமும் கற்றுவருகிறார் கங்கனா.
இதன் ஷூட்டிங் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.