தயாரிப்பாளர் தானு, கமல்ஹாசன்
தயாரிப்பாளர் தானு, கமல்ஹாசன் pt web
சினிமா

மீண்டும் ‘ஆளவந்தான்’; தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட போஸ்டர்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Angeshwar G

கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியிருந்த இந்தப் படம், கடந்த 2001-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. கமலின் ‘நம்மவர்’, ‘குருதிப்புனல்’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த மகேஷ் மகாதேவன் பின்னணி இசையமைத்திருந்தார். பாடகர் ஷங்கர் மகாதேவனின் ட்ரியோ குழுவான Shankar–Ehsaan–Loy பாடல்களை அமைத்திருந்தது.

மோஷன் கிராபிக்ஸ் கேமராவை ஆசியாவிலேயே முதன்முறையாக இத்திரைப்படத்தில் உபயோகித்து இருந்தார் கமல்ஹாசன். இறுதிக் காட்சியில் இரண்டு கமல்களும் சண்டை போடும் காட்சிகள் அக்காலத்திலேயே பேசுபொருளானது.

இந்தப் படத்தில் ரவீணா தாண்டன், மனீஷா கொய்ரலா, சரத் பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் இரட்டை கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தாலும், வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், புதிய தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் இந்தப் படம் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சமீப நாட்களாக ரீ ரிலீஸ் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ஆளவந்தான் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பலமுறை இது குறித்து பேசி வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு மீண்டும் ஆளவந்தான் குறித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “எழிலோடும் பொழிலோடும் ஆளவந்தான்.. விரைவில் வெள்ளித்திரையில்” என பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்த திரைப்படத்தின் போஸ்டரில், “எழிலோடும் பொழிலோடும் விரைவில்... உலகமெங்கும் 1000 திரையரங்குகளில்.. இன்று 22 ஆம் ஆண்டில்” என பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளின் போது அவரது நடிப்பில் உருவாகி இருந்த பாபா திரைப்படமும், ஆரவாரத்துடன் ரீரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.